கம்பளி

ஒங்கம்மா பாத்தா?….

கும்பகோணத்தை சேர்ந்த பட்டுப் பாட்டி பெரியவாளிடம் அளவிலாத பக்தி கொண்டவள். வ்யாஸராய அக்ரஹாரத்திலிருந்த தன்னுடைய ரெண்டு வீடுகளையும் மடத்துக்கே எழுதி வைத்தாள்.

பெரியவா ஸதாராவில் முகாமிட்டிருந்த போது, பாட்டியும் அங்கு வந்திருந்தாள். நல்ல குளிர்காலம்!

ஒருநாள் காலை தன்னுடைய பாரிஷதரான பாலு அண்ணாவை அழைத்தார்…..

” இந்தா…..பாலு! இந்தக் கம்பிளிய கொண்டு போயி,  பட்டுப் பாட்டிட்ட குடு”

“ஸெரி……”

வாங்கிக் கொண்டு போனார். ஆனால் நாள் முழுக்க இருந்த கார்யங்களில், கம்பிளியை குடுக்க மறந்து விட்டார்.

நள்ளிரவாகிவிட்டது!

பெரியவா படுத்துக் கொண்டுவிட்டார்! பாலு அண்ணா கொஞ்சம் தள்ளி படுத்துக் கொண்டு தூங்கிவிட்டார்!

“பாலு!……”

பெரியவாளின் மதுரக்குரல் கேட்டு எழுந்து கொண்ட பாலு அண்ணாவிடம்….

“ஏண்டா….பட்டுப் பாட்டிக்கு போர்வை குடுத்தியோ?”

தூக்கிவாரிப் போட்டது!

“ஆஹா! மறந்தே போய்ட்டேனே!…இல்ல பெரியவா…… மறந்தே போய்ட்டேன்”

பெற்றவளுக்கு மட்டுந்தான், தன் குழந்தைகள் எத்தனை தொண்டு கிழமானாலும் அவர்களுடைய தோற்றத்தைப் பார்க்கத் தெரியாமல், எப்போதுமே குழந்தையாகவே பார்க்க முடியும்!

“ஸெரி…..இப்போவே போயி, அவ எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு கம்பிளியை அவட்ட குடுத்துட்டு வா”

“இந்த நடுராத்ரிலயா? குளிரான குளிர்! எங்க போய் பாட்டியை தேடறது?….. காலம்பற குடுத்துடறேனே பெரியவா!…”

தெய்வக் குழந்தை அடம் பிடித்தது!

“இல்ல…..இப்பவே குடுத்தாகணும்! நீ என்னடா?… ராத்ரிலதான குளிர் ஜாஸ்தி? பாவம். நடுங்கிண்டிருப்பா!”

கம்பிளியை எடுத்துக் கொண்டு, அர்த்த ராத்ரியில் வீடுவீடாக அலைந்து திரிந்து, இருட்டில் முடங்கிக் கிடக்கும் உருவங்களை எல்லாம் உற்று உற்று பார்த்து, கடைசியில் கபிலேஶ்வர் என்ற மராட்டியர் வீட்டில் ஒரு ஓரத்தில் குளிரில் தன் புடவையை சுருட்டி, முடக்கிக் கொண்டு கிடந்த பாட்டியைக் கண்டுபிடித்துவிட்டார்!

“பாட்டி! ….பாலு…..”

“ம்…என்னப்பா?….என்ன வேணும்?..”

தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்ட பாட்டியின் காதில் அம்ருதமாக விழுந்தது…. பாலு அண்ணா சொன்னது…..

“பெரியவா….இந்தக் கம்பிளிய ஒங்ககிட்ட குடுக்கச் சொல்லி காலமேயே சொன்னா….. மறந்தே போய்ட்டேன்! பெரியவா, இப்போ ஞாபகமா கேட்டா…. குடுக்கலன்னதும், ஒடனேயே எங்க இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சு குடுக்கச் சொன்னா…..”

“பெரியவாளா!!…..என்னப்பனே! இந்த ஜீவனுக்கும் இப்டியொரு அனுக்ரஹமா!…”

பாட்டி அடைந்த ஸந்தோஷத்துக்கு ஏதாவது அளவு இருக்குமா என்ன? கண்ணீரோடு, கம்பிளிக்குள் முடங்கினாள்.

பெரியவாளோட பட்டு ஹ்ருதயம் கம்பிளியாக அந்த வயஸான ஜீவனுக்கு ஹிதத்தை குடுத்தது.

பிறருக்கு நாம் செய்யும் நல்லதும், கெட்டதும், உண்மையில், நமக்கு நாமே செய்து கொள்வதுதான்! ஏனென்றால் அது ஏதாவது வழியில், நமக்கே திரும்பும்!

பாலு அண்ணா, பட்டுப் பாட்டிக்கு செய்த கைங்கர்யம்…. அவருக்கே திரும்பியது….

எப்படி? யாரால்…?

ஸம்போட்டி என்ற ஊரில் பெரியவா தங்கியிருந்த நேரம், நல்ல மார்கழி மாஸக் குளிர்!

ஒருநாள், பாலு அண்ணா, அங்கிருந்த ஒரு கோவிலின் திறந்த வெளியில்  அஸதி மேலிட, சுருண்டு படுத்து, அந்தக் குளிரிலும் எப்படியோ உறங்கிப் போனார்.

மறுநாள் விடிகாலை எழுந்தபோது, தன் மேல் ஒரு ஸால்வை போர்த்தியிருப்பதைக் கண்டார். ஸஹ பாரிஷதர்கள் யாராவது போர்த்தியிருப்பார்கள் என்று எண்ணி, இது பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

நாலு நாள் கழித்து, பெரியவா பாலு அண்ணா இடுப்பில் கட்டியிருந்த ஸால்வையை பார்த்து விட்டுக் கேட்டார்….

“ஏதுடா பாலு…..போர்வை நன்னாயிருக்கே! ஏது?”

“தெரியல பெரியவா…..! வேதபுரியோ, ஸ்ரீகண்டனோ போத்தியிருப்பா போல இருக்கு…. நான் தூங்கிண்டிருந்தேன்”

தன் ஊகத்தை சொன்னார்

பெரியவா ஜாடை பாஷையில் “ம்ஹும்! அப்படி இல்லை” என்று தன் ஆள்காட்டி விரலை இப்படியும் அப்படியுமாக ஆட்டிவிட்டு, தன்னுடைய மார்பில் தட்டிக் காட்டிக் கொண்டார்!

முகத்தில் திருட்டு சிரிப்பு!

“நல்ல பனி! நீ பாட்டுக்கு…. தரைலயும் ஒண்ணும் விரிச்சுக்காம, போத்திக்கவும் போத்திக்காம படுத்துண்டு இருந்தியா…..! ஒங்கம்மா பாத்தா எப்டி நெனைச்சுண்டு இருந்திருப்பா….ன்னு தோணித்து..! அதான் போத்திவிட்டேன்!…”

இந்த க்ஷணத்தை இந்தக் காட்சியை அப்படியே நாம் மனஸுக்குள் ‘snap shot’ எடுத்துக் கொண்டு, அதிலேயே மக்னமாகிப் போய்விடணும்!

பெத்த அம்மாவுக்கும் “பெத்த [தெலுங்கு-Bedda] அம்மாவாக” தாயினும் சிறந்த தாயான பெரியவாளுடைய இந்த மஹா ப்ரேமையை அனுபவித்த பாலு அண்ணா என்ற பாக்யவான், கண்களில் கண்ணீர் மல்க நமஸ்கரித்தார்.
பாலு அண்ணாவுக்கு நமஸ்காரம்.

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறி விடுவாய்” என்பது வேதவாக்கு!  பாலு அண்ணா,  பெரியவாளையே ஸதா ஸ்மரித்து, தர்ஶித்து, உணர்ந்ததால்,  ஸன்யாஸ கோலத்தில் பெரியவா மாதிரியே இருக்கார்.

பெரியவா -1

பெரியவா ஒரு நாள், மத்யான்னம் வரைக்கும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு வந்திருந்த எல்லோருக்கும் தர்ஶனம் குடுத்துக் கொண்டிருந்தார்.

ஏக கூட்டம். கடைசியில் ஒரு வயஸான பாட்டி நின்று கொண்டிருந்தாள். பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினாள்.

“ஒனக்கென்ன வேணும்? கேளு…..”

தன்னுடைய பரம பக்தை என்று தெரியும். சிரித்துக் கொண்டே அந்த பாட்டியை கிண்டினார்.

“நேக்கு இனிமே என்ன வேணும்? ஸதா ஸர்வ காலமும் பெரியவாளை ஆராதிச்சிண்டே இருந்தா…. அது ஒண்ணே போறும்……….”

“அதான் இருக்கே!…………கொறையே இல்லாம பண்றியே! இப்போ, இந்த க்ஷணம் ஒனக்கு ஏதாவது ஆசை இருக்கா? சொல்லு…..”

முகத்திலோ ஒரு வகையான, புன்சிரிப்பு!

சுற்றி இருந்தவர்களோ…..” பெரியவா இன்னிக்கி இந்தப் பாட்டியை ஏன் இப்படி கொடையறார்?” என்று புரியாமல் முழித்தனர்.

பெரியவா அப்படி சொன்னதும் பாட்டி கொஞ்சம் தயங்கினாள்………..

விடுமா என்ன இந்த விளையாட்டுக் குழந்தை ?

இன்று அந்த பாட்டி வாயைக் கிண்டி கிளறி ஏதோ ஹிமாலய விஷயத்தை, தூஸி மாதிரி உலகுக்கு காட்டும் திருவிளையாடல் அரங்கேற வேண்டாமா?

“சொல்லு…….பரவாயில்லே…ஏதோ, என்னால முடிஞ்ச அளவு ஒதவி பண்றேன்…..”
( அம்மாடியோவ்! ‘முடிஞ்ச அளவு’ ஒதவி பண்றாறாமே!)

“பெரியவாகிட்ட சொல்லணுன்னு ரொம்ப ஆசைதான்…..”

“சொல்லு….சொல்லு….”

“நேக்கு ஒரே ஒரு ஆசை……..இந்த உஸுர் போறதுக்குள்ளே ஒரே ஒரு தடவை பத்ரி நாராயணனை பாக்கணும்………”

மெதுவான குரலில் தயங்கி தயங்கி சொன்னாள்.

வந்தியா? வழிக்கு!….இதற்காகவே காத்திருந்தவர் போல் பலமாக சிரித்தார்…….

ஆனால் அடுத்த க்ஷணம், ஒப்புமையில்லாத தன்னைத்தானே காட்டிக் கொண்டு, வகையாக மாட்டிக் கொண்டார்!

“நீதான் ஒனக்கு எதிர்லயே பாத்துண்டுதானே இருக்கே?”……..

“எதிர்லயா? எதிர்ல பெரியவா நீங்கதானே இருக்கேள்? பத்ரி நாராயணன் எங்க?

“என்ன ஸந்தேஹமா?……….

[ஹிமாலய உண்மை திறந்தது]

“எனக்கு மேலே பாரு……இது என்ன மரம்?”

“எலந்தை மரம்”

“ஸம்ஸ்க்ருதத்ல, எலந்தைக்குத்தான் பதரி….ன்னு பேரு. தெரியுமோ?”

“நாராயணா! நாராயணா!”

லேட்டாக புரிந்து கொண்ட பாட்டியும், சுற்றி இருந்தவர்களும் பேச்சு எழாமல், கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

ஆம். பதரி மரத்தின் கீழே இருக்கும் நாராயணன் நானே! என்று பட்டவர்தனமாக பெரியவா திருவாக்கில் வந்ததை நேரில் கேட்க என்ன புண்ணியம் செய்தனரோ?

எப்பேர்ப்பட்ட அவதாரபுருஷரிடம் இருந்தாலும், ப்ரத்யக்ஷமான அவரை விட, இன்னும் வேறு தெய்வ வடிவங்களை நேரிலோ, யோகத்தாலோ, கோவில்களிலோ காண்பதுதான் உத்தம பக்த லக்ஷணம் என்ற எண்ணம் ஏன் வரவேண்டும்? க்ருஷ்ணனையோ, ராமனையோ, அம்பாளையோ நேரில் தர்ஶனம் பண்ணினால் அவர்களுக்கு மேல் உள்ள யாரையாவது தர்ஶனம் பண்ண வேண்டுமென்று ஆசைப்படுவோமா?

‘உள்ளங்கை நெல்லிக்கனி’ என்பதை விட, உள்ளங்கை என்ன? ரெண்டு கையும் கொள்ளாத அளவு, நல்ல மணக்க மணக்க பெருமாளுக்கு நிவேதித்த ‘படா படா ஸைஸ்’ திருப்பதி லட்டே, நம்மிடையே இன்றும் வாழ்ந்து, நம்முடன் பேசி, உபதேஸித்துக் கொண்டு, அனுக்ரஹம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அதை விட்டுட்டு, வேற எதைத் தேடி இன்னும் அலைந்து கொண்டிருக்கிறோம்? அது ஸந்தோஷப்படும்படி நாம் வாழ்ந்தாலே போறுமே!

பெரியவா போன்ற உத்தம குருவை அடைந்தவர்களுக்கு, ஸாக்ஷாத் பகவானே நேரில் வந்து தர்ஶனம் குடுத்தால் கூட குரு ஸேவையால், ஸ்மரணையால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு, பகவானைக்கூட இணையாக நினைக்க மாட்டார்கள்.

பண்டரீபுரத்தில் வாழ்ந்த ‘ஸந்த் ஏக்நாத்’, தன்னுடைய குருவான ஸ்ரீ ஜனார்தன ஸ்வாமிக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 12 வர்ஷம், அப்படியொரு கைங்கர்யம் பண்ணிவந்தார். குரு மூலம் மந்த்ரோபதேஸம் கூட ஆகவில்லை. இவருடைய அன்பைக் கண்ட குரு, ஸாக்ஷாத் தத்தாத்ரேயரை அழைத்து, ஏகநாதருக்கு தர்ஶனம் குடுக்கச் சொல்லி ப்ரார்த்தனை பண்ணினார். அவ்வாறே, ஒருநாள், ஏகநாதர் குளித்துவிட்டு வரும்வழியில், ஒரு மரத்தடியில் தத்தாத்ரேயர் அவருக்கு தர்ஶனம் குடுத்ததும், ஏகநாத் அவரை நமஸ்காரம் பண்ணிவிட்டு, ஸாதாரணமாக, நேராக குருவின் குடிலுக்கு வந்து எப்போதும்போல் தன் கைங்கர்யங்களை பண்ண ஆரம்பித்தார்.

ஜனார்தன ஸ்வாமியோ தன் ஶிஷ்யன், தத்தாத்ரேயரை பார்த்து விட்டு வந்து பக்தியில் மயங்கி மயங்கி விழுவான், அரற்றுவான், அவனை எப்படியெல்லாம் ஸமாதானப் படுத்தவேண்டும் என்பது போலெல்லாம் மனஸில் ஒத்திகை பார்த்துக் கொண்டு ஶிஷ்யனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸாயங்காலம் ஆச்சு! ஏகநாதரோ, தத்தாத்ரேயரைப்பற்றி வாயைத் திறக்கக் காணோம்! குருவுக்கு தாங்கவில்லை. கேட்டுவிட்டார்……

“காலைல என்ன பார்த்தே?”

“தத்தாத்ரேயரை பார்த்தேன்………”

“என்னடா? இப்படி ஸாதாரணமா சொல்றே? ஸாக்ஷாத் பகவானை பார்த்திருக்கியே!”

“நான் அதுக்கெல்லாம் ஆசையே படலியே! என்னோட குருவும், பகவானுமான உங்களைத்தவிர, உங்களுக்கு ஸேவை பண்றதைத் தவிர எனக்கு வேற பாக்யம் என்ன இருக்கு?”

இது உண்மையிலேயே உத்தமமான குருவை அடைந்து அவருக்கருகில் இருந்து ஸேவை கூட பண்ண வேண்டாம். அப்பேர்ப்பட்ட குருவின் ஸ்மரணை மட்டுமே போதுமானது. இது ஒரு அனுபவம் மட்டுமே!

நாமும் தினமும் பெரியவாளை ஸ்மரணம் பண்ணும் பாக்யமே, “அந்த திருப்பதியின் திவ்யலட்டு” நமக்குப் பண்ணும், மஹா மஹா அனுக்ரஹம்!